Saturday, September 27, 2014

நாவல்பழம்-மூலநோயை தடுக்கும்


பழங்கள் மனிதனுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தருபவை. நோய்கள் அணுகாதவாறு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடியவை. பழங்கள்  நாவுக்கு சுவையையும், மணத்தையும் கொடுத்து உடலுக்கு வலுவையும் கொடுக்கிறது. இந்த வகையில் நாவல்பழத்தின் மருத்துவ பயன்களை பற்றி  அறிந்து கொள்வோம். நாவல்பழத்தின் பயன்பாடு அவ்வையார் காலத்தில் இருந்தே வந்திருப்பதை பல புராண கதைகள் மூலம் நாம் அறிந்திருப்போம்.  நாவலில் கொடிநாவல், குழிநாவல், கருநாவல், சம்புநாவல், நாட்டு நாவல் என பல வகைகள் உள்ளன.

ஏரிக்கரைகளிலும், கண்மாய், குளக்கரையிலும் நாவல்மரம் பெரிதாக வளர்ந்திருக்கும். தற்போது நவீன தொழில் நுட்பத்தால் நாவல்பழம் பெரியதாகவும்,  அதிகமாகவும் விளைவிக்கப்படுகிறது. நாவல் மரத்தின் அனைத்து பாகங்களுமே மருத்துவ பயன் கொண்டவை. நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ்,  இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில் சிறப்பம்சமாக இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என முச்சுவையும் நிறைந்துள்ளது. நாவல்பழத்தின் துவர்ப்பு சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் ரத்தத்தை சுத்தப்படுத்தும். 

ரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் ரத்தத்தின் கடின தன்மை மாறி இலகுவாகும். மேலும் ரத்தத்தில் கலந்துள்ள ரசாயன வேதி  பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும். சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும் சக்தி நாவல்பழத்துக்கு உண்டு. மேலும் மலச்சிக்கலை  போக்கும். மூலநோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூலநோயின் தாக்கம் குறையும். நன்கு பழுத்த  நாவல்பழத்தை உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.

அஜீரணக்கோளாறுகளை போக்கி குடல்தசைகளை வலுவடைய செய்யும் சக்தி நாவல்பழத்துக்கு உண்டு. தூக்கமின்றி அவதிப்படுபவர்கள்,  நாவல்பழத்தை மதிய உணவுக்கு பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும். மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல்பழத்தை சாப்பிட்டு  வந்தால் உடல் தேறும். நாவல்பழம் வியர்வையை பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை தணிக்கும்.  ஞாபக சக்தியை அதிகரிக்கும். நாவல் பழத்தின் விதைகளை எடுத்து வெயிலில் காய வைத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு ஒரு  தேக்கரண்டி அளவு எடுத்து சூடான நீரில் கலந்து காலை வேளையில் குடித்து வந்தால் சர்க்கரை நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். சர்க்கரை  நோய் கட்டுப்படும். 


சர்க்கரை நோயின் பாதிப்புக்குள்ளானவர்களும், சர்க்கரை நோய் வராமல் தடுக்க நினைப்பவர்களும் நாவல்பழம் சாப்பிடலாம். நாவல் விதை சூரணம்  கணையத்தை பலப்படுத்தி, அதன் சுரப்பை சீராக்கும் தன்மை கொண்டது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. நாற்பது  வயதை அடைந்தவர்கள் அனைவரும் நாவல் விதை சூரணம் சாப்பிடுவது நல்லது. நாவல் விதையை லேசாக வறுத்து இடித்து பொடியாக்கி கஷாயம்  செய்து டீ, காபிக்கு பதிலாக அருந்தலாம். இன்றும் மலைவாழ் மக்கள் நாவல்விதையை டீ, காபிக்கு பதிலாக அருந்துவதை வழக்கமாக  கொண்டுள்ளனர்.

நாவல் கொழுந்து இலைச்சாறு-1 ஸ்பூன், தோல் நீக்கிய ஏலக்காய் அரிசி-4, லவங்கப்பட்டை தூள்-அரை ஸ்பூன் இவற்றை ஒன்றாக சேர்த்து கஷாயம்  செய்து காலை, மாலை அருந்தி வந்தால், அஜீரணக்கோளாறு, வயிற்றுப்போக்கு, வயிற்று கடுப்பு போன்றவை நீங்கும். 100 ஆண்டுகள் பழமையான  நாவல் மரப்பட்டை காயகற்ப மருந்து செய்ய பயன்படுத்தப்படுகிறது. நாவல்பட்டையை இடித்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிநீராக  அருந்தி வந்தால், நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும்.

பெண்களுக்கு ஏற்படும் கருப்பை பாதிப்புகள் அகலும். எனவே நாவல்பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி சாப்பிட்டு அதன் பயன்களை  பெறுவோம்.


வயிற்றுப்போக்கு: வயிற்றுப்போக்கினால் அவஸ்தைப்படுபவர்கள், நாவல்பழத்தினை ஜூஸ் போட்டு, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து குடித்து  வந்தால், உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

வெண் புள்ளி நோய்: நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், அவை சருமத்தில் ஏற்படும் வெண் புள்ளி நோய்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.

படுக்கையில் சிறுநீர் கழிப்பது: சிறுவர்கள் இரவில் படுக்கையில் சிறுநீர் கழித்தால், நாவல்பழத்தின் விதைகளை பொடி செய்து, அவற்றை தண்ணீரில்  கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை கொடுத்தால் பிரச்னை தீரும்.

மாரடைப்புநாவல் பழத்தை அளவாக சாப்பிட்டு வந்தால், தமனிகளில் ஏற்படும் பிரச்னைகள் குறைந்து, மாரடைப்பு வருவதை குறைக்கும்.
 
குறிப்பு: 

* நாவல் பழங்களை சாப்பிட்ட உடனே பால் குடிக்கக்கூடாது. 

* நாவல் பழங்களை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடல் வலி மற்றும் காய்ச்சல் ஏற்படும்.

No comments:

Post a Comment